வழியில் சந்தித்த மூன்று கடவுள்கள்
கோவில் முடிந்து
வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்த
மூன்று கடவுள்களை
ஓர் யாமத்தில் சந்தித்தேன்
ஒருவர்
நேரமாகிவிட்டதென்று
கையிலொரு விபூதிப் பொட்டலத்தைத் திணித்துவிட்டு விரைந்தார்
மற்றொருவர்
கைகளைப் பிடித்துக்கொண்டு
வாஞ்சையாய் "அப்பா நான் வரட்டுமா" என்றுவிட்டு நடந்தார்
விபூதியுமின்றி வாஞ்சையுமின்றி
நெருங்கிய மற்றொருவரிடம்
சொல்லவோ பார்க்கவோ ஏதுமில்லை
எனினும்
மௌனத்தின் கிளைச்சாலைக்குள்
நுழைந்த சடுதியில்
மறைந்து போனார்
~
சேரவஞ்சி
Comments
Post a Comment